சாய்ந்த உயரழுத்த மின் கோபுரம் கொடுங்கையூரில் அபாயம்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில், துணை மின் நிலையத்தில் இருந்து மின் நிலையங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யக்கூடிய, உயர் அழுத்த மின் கம்பிகளை தாங்கி நிற்கும், கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், தண்டையார்பேட்டை வழியாக கோயம்பேடு வரை மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகரில் 100 அடி உயர மின் கோபுரம், நேற்று திடீரென சாய்ந்தது. இதனால், மின் கம்பிகள் தாழ்வாக தொங்கியபடி உள்ளன. சம்பவம் நடந்த நேரம் அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, மின் கோபுரத்தை மாற்றியமைக்க, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.