உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவிழா அழைப்பிதழில் பாரம்பரிய முறை அனைத்து ஜாதிகள் கட்டளைதாரர் தீர்மானம்

திருவிழா அழைப்பிதழில் பாரம்பரிய முறை அனைத்து ஜாதிகள் கட்டளைதாரர் தீர்மானம்

சென்னிமலை கோவில் திருவிழா அழைப்பிதழ்களில், பாரம்பரிய முறையே கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னிமலையில் அனைத்து ஜாதி கட்டளைதாரர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.அனைத்து ஜாதிகளை சேர்ந்த கட்டளைதாரர் ஆலோசனை கூட்டம் சென்னிமலையில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பூந்துறை பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வெள்ளோடு, பூந்துறை, நசியனுார் மற்றும் எழுமாத்துார் ஆகிய நான்கு நாட்டு கவுண்டர்கள் மடத்தின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கடந்த மார்ச், 5ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மூலம், அனைத்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவை மேற்கோள் காட்டி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், 'அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் திருவிழா அழைப்பிதழ்களில், ஜாதி பெயரை பயன்படுத்தக்கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் கோவிலை பொறுத்தவரை அனைத்து ஜாதியினரும் கோவில் கட்டளைதாரராக, நன்கொடையாளர்களாக இருந்து வருகிறோம். கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறைதான் நிர்வாகித்து வருகிறது. திருவிழா காலங்களில் அனைவருக்கும், அனைத்து ஜாதியினரும் ஒற்றுமையுடன் பாகுபாடின்றி செயல்பட்டு வருகிறோம். அதனால் இனிவரும் கோவில் திருவிழா அழைப்பிதழ்களில், பல்லாண்டு காலமாக இருந்த பாரம்பரிய முறையே தொடர அரசு அனுமதிக்க வேண்டும். மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பு ஒரு குறிப்பிட்ட கோவிலில் ஏற்பட்ட பிரச்னைக்காக வழங்கப்பட்ட தீர்ப்பு.எனவே சென்னிமலை முருகன் கோவிலில் பழைய முறையே தொடர அரசு ஆவணம் செய்ய வலியுறுத்தி, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில் கட்டளைதாரராக உள்ள அனைத்து ஜாதிகளை சேர்ந்த மடத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !