ஷெனாய் நகர் குடியிருப்பு பகுதியில் இயக்கும் டாஸ்மாக் கடையால் அவதி
செனாய் நகர், அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டு, ஷெனாய் நகர், புல்லா அவென்யூ, 1வது குறுக்கு தெருவில், மதுக்கூடத்துடன் டாஸ்மாக் கடை உள்ளது.இதன் அருகில், ரேஷன் கடை, அரசு பள்ளி, மாவட்ட கிளை நுாலகம், அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்த கடையில் மது வாங்கி, சாலையிலேயே அமர்ந்து 'குடி'மகன்கள் குடித்து, அட்டகாசம் செய்கின்றனர்.இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் கூறியதாவது:குடியிருப்பு பகுதியின் மத்தியில், மதுக்கூடத்துடன் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது வாங்கி, சாலையில் மது அருந்துவோர் அநாகரிக முறையில் பேசி அரட்டை அடிக்கின்றனர்.மாநகராட்சி கழிப்பறை, உடற்பயிற்சி மையத்தின் நுழைவாயிலேயே மது அருந்தி, அங்கேயே பாட்டில்களை வீசி செல்கின்றனர். சிலர், சிறுநீர் கழித்தும் செல்வதால், கடும் துர்நாற்றம் வீடுகிறது. அண்ணா நகர் மண்டல அலுவலகத்தின் பின்புறத்திலேயே, இந்த கூத்து நடக்கிறது.இரவு நேரத்தில், இச்சாலையில் நடந்து செல்லவே அச்சமாக இருக்கிறது. பொதுமக்களின் நலனை கருதி, டாஸ்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக, மண்டல அலுவலகம், சென்னை கலெக்டரிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும், யாரும் கண்டுகொள்ளவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.