காவலர் குடியிருப்பில் குடிநீர் தட்டுப்பாடு
சென்னை:கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதால், காவலர்குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, காவலர் குடியிருப்புகளுக்கு லாரிகள் வாயிலாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே, குடியிருப்புகளுக்கு ஏற்ப குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது தொடர்பாக, பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளோம்.தற்போது, பீக் ஹவர்சில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், குடிநீர் லாரி ஓட்டுநர்கள், 'நீங்கள் தானே கட்டுப்பாடும் அபராதமும் விதித்துள்ளீர்கள். நாங்கள் பொது மக்களுக்கு தான் முதலில் தண்ணீர் வினியோகம் செய்வோம்' எனக் கூறுகின்றனர். ராயபுரம், கொண்டித்தோப்பு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டம் காவலர் குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. காவலர் குடியிருப்புகளுக்கு தடையின்றி தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.