ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மனைவியும் கைது
திருவேற்காடு, திருவேற்காடில், ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில், அவரது மனைவிக்கு தொடர்பிருந்தது உறுதியானதை அடுத்து, ஒரு மாதத்திற்கு பின், அவர் கைது செய்யப்பட்டார். திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், 50. இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி விஜயகுமாரி, 40. தம்பதிக்கு, ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஆக., 1ம் தேதி, பருத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகளை அழைத்து வர, சிவகுமார் ஆட்டோவில் சென்றார். இயற்கை உபாதை கழிப்பதற்காக, வழியில் ஆட்டோவில் இருந்து இறங்கிய சிவகுமாரை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றனர். இது குறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி லால் என்கிற பிரகாஷ், 32, கல்லுாரி மாணவர் மோகன், 20, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 45, என்பவருடன், விஜயகுமாரிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிவகுமார், கள்ளத் தொடர்பை துண்டிக்குமாறு விஜயகுமாரி மற்றும் சுரேஷை எச்சரித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், கூலிப்படையை வைத்து சிவகுமாரை கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சுரேஷ், ரவுடி பிரகாஷ், மாணவர் மோகன் என, மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக, ஒன்றரை மாதமாக விஜயகுமாரியிடம் திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கொலைக்கு உடந்தையாக விஜயகுமாரி இருந்தது தெரிய வந்ததையடுத்து, நேற்று அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.