மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
சென்னை, சூளைமேடில், நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண், பரிதாபமாக பலியானார். சூளைமேடு, வீரபாண்டியன் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் சர்மிளா, 40; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் நான்காவது மாடியில், நடந்து கொண்டே மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சுற்றுச்சுவர் மிகக்குறைவான உயரத்தில் கட்டப்பட்டிருந்ததால், எதிர்பாராமல் கால் இடறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்படி, சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.