உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆதம்பாக்கத்தில் திருமண மண்டபம் ரூ.11.68 கோடியில் பணி துவக்கம்

ஆதம்பாக்கத்தில் திருமண மண்டபம் ரூ.11.68 கோடியில் பணி துவக்கம்

ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 30 ஆண்டுகளாக திருமண மண்டபம் செயல்பட்டு வந்தது.அக்கட்டடம் சிதலமடைந்த நிலையில், அதனை அகற்றி, புதிதாக திருமண மண்டபம் அமைக்க வேண்டும்என, சுற்றுவட்டாரப் பகுதிவாசிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து, மண்டல குழு கூட்டத்தில், வார்டு கவுன்சிலர் பூங்கொடியும் கோரிக்கை வைத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து, புதிய திருமண மண்டபத்தை பல்நோக்கு மையமாக அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 11.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இதையடுத்து, பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, புதிய கட்டடத்திற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரத்தில் 19,252 சதுர அடியில், 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த திருமண மண்டம் பாழடைந்ததால், அது இடிக்கப்பட்டு, 11.68 கோடி ரூபாயில் புதிய திருமண மண்டபம் கட்டப்படுகிறது. அது பல்நோக்கு மையமாகவும் அமைக்கப்படுகிறது.அதன் தரை தளத்தில், 435 பேர் ஒரே நேரத்தில் அமரும் வசதி உள்ளது. முதல் தளத்தில் ஒரே நேரத்தில், 186 பேர் உணவு உண்ணலாம். இரண்டாவது தளத்தில் ஆறு தங்கும் அறைகள் அமைக்கப்படுகின்றன.மண்டப வளாகத்தில், 17 கார்கள், 25 இருசக்கர வாகனங்கள் நிறுத்தலாம். இப்பணிகள் ஓராண்டிற்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ