கோவை- - திண்டுக்கல், சேலம் மெமு ரயில் மீண்டும் வேணும்
கோவை;தண்டவாளப் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்ட கோவை- - சேலம் மற்றும் கோவை- - திண்டுக்கல் மெமு ரயில் சேவைகளை மீண்டும் துவக்க வேண்டும் என, கோவை தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.மெமு ரயில்கள் ஒரு நகரத்துக்கு உள்ளேயோ அல்லது இரு நகரங்களுக்கு இடையேயான குறுகிய தூரத்துக்கோ இயக்கப்படுபவை. ஊரக மற்றும் புற நகர்ப்பகுதிகளுக்கு மெமு ரயில்கள் பெரும் வரப்பிரசாதமாக உள்ளன.கோவையில் இருந்து, 13 மெமு ரயில்கள், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, மேட்டுப்பாளையம், சொரணுார், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.கோவை-சேலம் இடையே இயக்கப்பட்டு வந்த மெமு ரயில் சேவை, 2023ல் தண்டவாள பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில், இந்த மெமு ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என, கோவையைச் சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. கோவை-திண்டுக்கல் இடையேயான மெமு ரயில் சேவையும் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இந்த வழித்தடத்தில் உள்ள 14 ரயில்வே ஸ்டேஷன்களை இணைக்கும் இந்த சேவையால், பல்வேறு தரப்பினரும் பயனடைவர்.இந்த இரு மெமு ரயில் சேவைகளையும் துவக்கும்படி, எம்.பி.,கள் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு, தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.