பக்தர்கள் ஓய்வு மண்டபம் பணியை வேகப்படுத்தணும்!
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பக்தர்கள் ஓய்வு மண்டபம் கட்டப்படும் நிலையில், அதற்கான பணியை, அதிகாரிகள் பார்வையிட்டனர்.பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் அம்மனை வழிபட, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், வருகை புரிகின்றனர்.இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக ஓய்வு மண்டபம் மற்றும் வரிசை தடுப்பு கட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. அரசால், 3.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கோவிலின் கிழக்கு திசையில் ஓய்வு மண்டபம் கட்டுமானப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணியை, நேற்று, ஹிந்து சமய அறநிலையத் துறை கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் பார்வையிட்டார். அப்போது, கட்டுமானப் பணியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, சக அதிகாரிகளை அறிவுறுத்தினார்.அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், ஹிந்துசமய அறநிலையத் துறை செயற்பொறியாளர் ரேவதி, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.