விளையாட்டு உபகரணங்கள் பயன்பாடு மாவட்டத்தில் கள ஆய்வு துவக்கம்
-- நமது நிருபர் -கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை இளைஞர்கள் பயன்படுத்துகின்றனரா என்று கள ஆய்வு துவங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த, கிராம ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.'ஒவ்வொரு ஊராட்சியிலும் விளையாட்டு மன்றம் அமைக்க வேண்டும். ஊராட்சித்தலைவர், செயலர், வி.ஏ.ஓ., பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் உறுப்பினராக இருக்க வேண்டும்.ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள இளைஞர்கள், தங்களை ஊராட்சி குழு உறுப்பினர்களாக பதிவு செய்து, விளையாட்டு உபகரணங்களைப் பெற்று, பயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சி மேற்கொண்ட பின்னர், உபகரணங்களை முறையாக ஒப்படைக்க வேண்டும்,' என, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.விளையாட்டு உபகரண தொகுப்பு பயன்படுத்தப்படுகிறதா, இளைஞர் ஆர்வமுடன் வாங்கி பயிற்சி பெறுகின்றனரா, ஊராட்சி அளவில் அமைக்கப்பட்ட விளையாட்டு மன்றம், குழுக்களின் செயல்பாடு எப்படி என்பது குறித்து கள ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில், இதற்கான கள ஆய்வு தீவிரமடைந்துள்ளது.விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அலுவலர்கள் கூறியதாவது: விளையாட்டு உபகரணம் பெற்ற ஊராட்சிகள் பெரும்பாலானவை, அவற்றைப் பயன்படுத்தாமல் வைத்துள்ளன. பெரும்பாலான ஊராட்சிகள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு அப்படியே தொகுப்பை வழங்கியுள்ளளனர்.மைதானங்கள் இருந்தும் சில ஊராட்சிகள் அவற்றை பராமரிக்க தவறி, அப்படியே விட்டுள்ளன. பள்ளிக்கு வழங்கப்பட்டும் உபகரணம் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக சில இடங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. மாவட்ட உயரதிகாரிகளுடன் இணைந்து, விளையாட்டு அலுவலர் தலைமையில் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.