வெள்ளை பூண்டு விலை வீழ்ச்சி; நீலகிரி விவசாயிகள் அதிர்ச்சி
மேட்டுப்பாளையம், ; வெள்ளைப் பூண்டு விலை மிகவும் குறைந்ததால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மருத்துவ குணம் நிறைந்த வெள்ளை பூண்டு, நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, கோத்தகிரி, கூடலுார் பகுதிகளில் அதிகளவில் பயிர் செய்கின்றனர். கடந்த மாதம் வரை ஒரு கிலோ ஊட்டி வெள்ளை பூண்டு, 300 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரம் சற்று விலை குறைந்து ஒரு கிலோ, 150 லிருந்து, 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தற்போது நீலகிரியில் பூண்டு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. நேற்று மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு பூண்டு மூட்டைகளை, நீலகிரி விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். விலை மிகவும் குறைவாக விற்பனை ஆனதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அறுவடை சீசன்
ஊட்டி கெந்தொரை பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரமோகன் கூறியதாவது:பூண்டு நடவு செய்த, ஐந்து மாதத்துக்கு பிறகு அறுவடை நடக்கும். ஒரு ஏக்கருக்கு, 900 முதல் 1,000 கிலோ வரை விதைப்பூண்டு நடவு செய்யப்படும். இரண்டு முறை களை எடுக்கப்படும். ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். நன்கு விளைந்தால், ஒரு ஏக்கருக்கு, 10 டன் வரை மகசூல் கிடைக்கும்.தற்போது பூண்டு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு, 150 லிருந்து, 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆனால், மண்டிகளில் அதிகபட்சமாக கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இது விவசாயிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இன்னும் விலை குறையும்
கோவை, மேட்டுப்பாளையம் பூண்டு வியாபாரிகள் சங்க தலைவர் ஆறுமுகம் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு, 35 ஆயிரம் மூட்டை பூண்டுகள் (1,500 டன்) விற்பனைக்கு வந்தன. இன்று (நேற்று) நடந்த ஏலத்தில் ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர். ஒரு கிலோ பூண்டு அதிகபட்சம், 100 ரூபாய்க்கும், சிறிய அளவிலான பூண்டு குறைந்த பட்சம், 30 ரூபாய்க்கும் ஏலம் போனது. பூண்டு வரத்து அதிகமானதால், விலை குறைந்துள்ளது. வரும் காலங்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.