மறைந்த சீனியர் வக்கீலின் உடல் இ.எஸ்.ஐ.,க்கு தானம்
கோவை;கோவையில், மறைந்த சீனியர் வக்கீலின் உடல், இ.எஸ்.ஐ., அரசு மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. கோவை, வடவள்ளி, சோமையம்பாளையத்தில் வசித்து வந்தவர் ஞானபாரதி,77; சீனியர் வக்கீலான இவர், 50 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். உடல்நிலை பாதிப்பால், நேற்று அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு, வக்கீல்கள் அஞ்சலி செலுத்தினர். இறந்த பிறகு தனது உடலை, அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்குமாறு, குடும்பத்தினரிடம் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அவரது விருப்பப்படி, கோவை சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மாணவர்களின் பயிற்சிக்கு, அவரது உடலை நேற்று குடும்பத்தினர் ஒப்படைத்தனர். குற்றவியல் வக்கீலான ஞானபாரதி, கோவை குண்டுவெடிப்பு வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி உள்ளார். இலக்கியத்தில் ஆர்வமுள்ள அவர், பல்வேறு கட்டுரைகள், நாவல்கள், நுால்கள் எழுதி உள்ளார்.