உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊதிய முரண்பாட்டுக்கு தீர்வு கேட்கின்றனர் செவிலியர்கள்

ஊதிய முரண்பாட்டுக்கு தீர்வு கேட்கின்றனர் செவிலியர்கள்

கோவை: தேசிய சுகாதார இயக்கம் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்கீட்டில் பல்வேறு சுகாதார திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு, மருத்துவ தேர்வு வாரியம்  (எம்.ஆர்.பி.,) நடத்தும் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நர்ஸ்கள் தற்காலிக பணி அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பல கட்ட போராட்டங்களுக்கு பின் இவர்களின் ஊதியம், ரூ. 22 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதேபோல், மாநில அரசின் கீழ், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளில் எம்.ஆர்.பி., தேர்ச்சி பெற்ற நர்ஸ்கள் தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் மட்டுமே, ஊதியமாக வழங்கப்படுகிறது. இதற்காக பலமுறை போராடியும் எந்த பலனும் இல்லை என செவிலியர்கள் ஆதங்கப்படுகின்றனர். தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில பொது செயலாளர் சுபின் கூறுகையில்,‘‘ இருவரும், ஒரே கல்வித்தகுதி கொண்டுள்ளதோடு, எம்.பி.ஆர்., தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே காலக்கட்டத்தில் பணியில் சேர்ந்தும், மத்திய அரசின் திட்டத்தில் பணிபுரிவோருக்கு இணையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாநில அரசு இதற்கு பிரத்யேக அரசாணை வெளியிட்டால் தான், கருவூலத்துறை ஊதியத்தை விடுவிக்கும். புதிய அரசு, தற்காலிக நர்ஸ் ஊதிய முரண்பாட்டில் நீடிக்கும் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, 21ம் தேதி  இயக்குனரகத்தில் போராட்டம் நடத்தி, கோரிக்கை மனு வழங்கப்படும்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை