தண்ணீர் தேடி அலையும் பறவைகள் பாதுகாக்க முன்வரலாமே
பொள்ளாச்சி, ; மக்கள், தங்களது வீடுகளில், மொட்டை மாடி மற்றும் மரங்களில், பறவைகளுக்காக தண்ணீர் மற்றும் தானியங்கள் வைக்க வேண்டுமென, சூழல்ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மரங்கள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து வறட்சியாக காணப்படுகிறது.பலரும் வீடுகளில், எந்நேரமும் மின்விசிறிகளை சுழலவிட்டும், 'ஏசி' பயன்படுத்தியும் வருகின்றனர். அதேநேரம், பறவைகள், விலங்குகள் தாகம் தணிக்க தண்ணீர் இல்லாமலும், வெப்பத்தை தாங்க முடியாமலும் அவதிப்படுகின்றன.இத்தகைய சூழலில், மக்கள், தங்களது வீடுகளில், மொட்டை மாடி மற்றும் மரங்களில், பறவைகளுக்காக தானியங்கள் வைக்கவும், குவளையில் தண்ணீர் வைக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.சூழல்ஆர்வலர்கள் கூறியதாவது:பறவைகள், தாகம் தீர்க்க பரிதவித்து வருகின்றன. பல வீடுகளில், தொட்டிகளில் வழிந்தோடும் தண்ணீரை குடிக்க பறவைகள் முற்படுகின்றன. நாய்கள், உடல் சூட்டை தணிக்க ஆங்காங்கே சுற்றி திரிகின்றன.பறவைகள் மற்றும் விலங்குகளை காக்க மக்கள் முன்வர வேண்டும். பறவைகளை காக்க நினைக்கும் சிலர் மட்டுமே, கோடையில் தங்கள் வீடுகளில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குகின்றனர்.வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள், தங்களது வீட்டு மாடிகளிலும், வாசலிலும் குவளையில் தண்ணீர் வைப்பதுடன், சிறிய அளவிலான பாத்திரத்தில் அரிசி, கம்பு உள்ளிட்ட தானிங்களை வைக்கலாம்.இவ்வாறு, கூறினர்.