விதிமுறை மீறும் வாகனங்கள் பள்ளி மாணவர்கள் தவிப்பு
வால்பாறை;அரசு பள்ளியின் முன், விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டின் அருகில், அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப்பள்ளியில் பல்வேறு எஸ்டேட் பகுதியைச்சேர்ந்த, 954 மாணவர்கள் படிக்கின்றனர்.பஸ் ஸ்டாண்டு அருகில் பள்ளி இருப்பதால், சாலையோரங்களில் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.குறிப்பாக பள்ளி நுழைவு வாயிலின் முன் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கேட் முன் வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டிருந்தும், அதை கண்டு கொள்ளாமல் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளி நுழைவு வாயிலில் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.