மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டி; முதல் பரிசை தட்டியது கற்பகம் பல்கலை
கோவை; சென்னையில் நடந்த மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் கோவை கற்பகம் பல்கலை முதல் பரிசை தட்டியது.சென்னை வி.ஐ.டி., கல்லுாரியில் இரு நாட்கள் ஹேண்ட்பால் போட்டிநடந்தது. இதில், மாநில அளவில், 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த காலிறுதி போட்டியில், கற்பகம் பல்கலை அணி, ஏ.வி.கே., கல்லுாரி அணியை, 24-6 என்ற புள்ளி கணக்கில் வென்றது.அரையிறுதியில், கரூர் அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லுாரி அணியை, 23-17 என்ற புள்ளி கணக்கில் வென்று கற்பகம் பல்கலை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பான இறுதிப் போட்டியில், கற்பகம் பல்கலை அணி, வேலுார் வி.ஐ.டி., அணியை எதிர்கொண்டது.இதில், 23-16 என்ற புள்ளி கணக்கில் கோவை கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்று, முதல் பரிசை தட்டியது. வெற்றி பெற்ற அணியினரை, கற்பகம் பல்கலை துணைவேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.