கால்நடைகளை குறி வைத்து தாக்கும் காட்டு யானைகள்; மலையோர கிராம மக்கள் அச்சம்
பெ.நா.பாளையம் : கோவை வடக்கு மலையோர கிராமங்களில், காட்டு யானைகள், கால்நடைகளை குறிவைத்து, தாக்கி வருவது அதிகரித்துள்ளது.கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். குறிப்பாக, காட்டு யானைகள் இரவு நேரங்களில் வேளாண் நிலங்களுக்குள் புகுந்து சோளம், கரும்பு, தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி வருகின்றன. காட்டு யானைகளின் வரவை கட்டுப்படுத்த, வேட்டை தடுப்பு காவலர்கள் பல்வேறு குழுக்களாக இணைந்து பணியாற்றினாலும், யானைகளின் வருகையை முழுமையாக தடுக்க முடியவில்லை.கடந்த சில நாட்களாக காட்டு யானைகள், கால்நடைகளை குறிப்பாக, பசு மாடுகளை தாக்குவது அதிகரித்து உள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால், பெரும்பாலான தோட்டங்களில், இரவு நேரங்களில் விவசாயிகள் தங்குவதில்லை. தங்களுடைய கால்நடைகளை மட்டும், தோட்டங்களில் கட்டி வைத்துவிட்டு அருகே கிராமங்களில் உள்ள தங்களது வீடுகளுக்கு வந்து விடுகின்றனர். இரவு நேரத்தில் தோட்டத்து சாளைகளுக்கு வரும் காட்டு யானைகள், அங்குள்ள தீவனங்கள் உள்ளிட்டவைகளை ருசி பார்க்கின்றன. அப்போது கட்டி வைக்கப்பட்டுள்ள பசு மாடுகளையும், தந்தங்களால் குத்துகின்றன. இதனால் பசுமாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில், செல்வராஜ் தோட்டத்தில் புகுந்து கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாட்டை ஒற்றை யானை தந்தத்தால், குத்தி கொன்றது. இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
முள்ளி சாலையில் யானைகள் உலா
வெள்ளியங்காடு - - மஞ்சூர் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வனத்தில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம், முள்ளி அருகே சாலையில் முகாமிட்டது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காரமடை வனத்துறையினர் கூறுகையில், 'முள்ளி சாலையில் யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளன. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும். சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. சாலையில் வனவிலங்குகளை கண்டால், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.