ஜே.இ.இ., பயிற்சிக்கு 8 மாணவர்கள் தேர்வு
கோவை: கடலுாரில் ஒரு மாதம் நடக்கும் ஜே.இ.இ., தேர்வுக்கான மாநில உண்டு உறைவிட பயற்சி முகாமில் கோவையில் இருந்து எட்டு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வுக்கான ஜே.இ.இ.,க்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலுாரில் மாநில அளவில் உண்டு, உறைவிட பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்திலிருந்து எட்டு மாணவர்கள் ஜே.இ.இ., மாநில பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். பொதுத்தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் ஏற்கனவே நடந்த பயிற்சி வகுப்புகளில் அவர்களின் பங்கேற்பின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். முகாமில் மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் போட்டித்தேர்வு நிபுணர்கள் ஜே.இ.இ., கியூட் போன்ற தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சியை நடத்துகின்றன.