உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தவறான பட்டா எண்ணால் வந்தது விபரீதம் ஆலாந்துறை தம்பதியர் தற்கொலை முயற்சி

 தவறான பட்டா எண்ணால் வந்தது விபரீதம் ஆலாந்துறை தம்பதியர் தற்கொலை முயற்சி

கோவை: வீட்டுமனை பட்டா எண்ணில் ஏற்பட்ட பிழையை மாற்றிக்கொடுக்க வலியுறுத்தி, தம்பதியர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆலாந்துறையை சேர்ந்த வெங்கடாசலம், 55, மனைவி நாகமணி மனு அளிக்க வந்தனர். பையில் கெரசின் பாட்டில் வைத்திருந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். எப்படியும் கெரசினை பறிமுதல் செய்து விடுவார்கள் என்று கருதி, கெரசினை இருவரும் தலை மீது ஊற்றி, தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட போலீசார், தீப்பெட்டியை பறித்தனர். இருவரின் தலையிலும் தண்ணீர் ஊற்றினர். அவர்கள் கதறி அழுதபடி போலீசாரிடம் கூறியதாவது: எங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு முன், இலவசமாக 1.5 சென்ட் வீட்டுமனையிடத்துக்கான பட்டா வழங்கப்பட்டது.பட்டா எண் பிழையாக அச்சிடப்பட்டிருந்தது. இதை சரி செய்ய, பேரூர் தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தோம். சரி செய்ய மறுத்து விட்டார்கள். எங்களது இடத்தை மூன்று பேர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள். நிம்மதியாக வாழ முடியாததால், வேறு வழியின்றி தீக்குளிக்க முயன்றோம். பட்டா எண்ணை திருத்தித் தராவிட்டால், மீண்டும் இதே போல் செய்வதைத்தவிர, வேறு வழியில்லை. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !