மருதமலை சாலையில் ஒற்றை காட்டு யானை
வடவள்ளி; பாரதியார் பல்கலை., முன்பு, மருதமலை சாலையில் வந்து நின்ற ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை வனச்சுற்று, பொம்மணம்பாளையத்தில் நேற்று அதிகாலை, வனப்பகுதியில் இருந்து ஒற்றைக்காட்டு யானை வெளியேறியது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், ஒற்றைக்காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்து மெல்ல நகர்ந்த ஒற்றை யானை, காலை, 6:00 மணிக்கு, ஐ.ஓ.பி., காலனிக்கு வந்தது. அங்கிருந்து விரட்டும் போது, காலை, 7:00 மணிக்கு, மருதமலை சாலை, பாரதியார் பல்கலை., இரண்டாம் கேட் அருகே வந்து நின்றது. சாலையில், யானை நிற்பதை கண்ட அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, வாகனங்களை நிறுத்தினர். சில நிமிடங்களிலேயே அங்கிருந்து, பாரதியார் பல்கலை., வளாகத்திற்குள் புகுந்தது. அதன்பின், வனத்துறையினர், ஒற்றை யானையை, மூன்றுகல் சரக வனப்பகுதிக்குள் விரட்டினர்.