உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்.டி.இ., திட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை; தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

ஆர்.டி.இ., திட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை; தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

பொள்ளாச்சி; ஆர்.டி.இ., எனப்படும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., அல்லது 1ம் வகுப்புகளில் குறைந்தபட்சம், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, மாணவர் சேர்க்கை நடக்கிறது. பள்ளிகளில் அட்மிஷன் வழங்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே வழங்கும். இந்நிலையில், தனியார் பள்ளி இயக்குனரகம், புதிய வழிகாட்டுதல்களை உள்ளடக்கி, தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, பொள்ளாாச்சி கல்வி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆர்.டி.இ., திட்டத்தில் மாணவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தில், கடந்த, 2021-22 முதல் 2024-25ம் கல்வியாண்டுகளில் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்வி கட்டண தொகை, மத்திய அரசால் வழங்கப்படவில்லை. இதனால், ஏப்., 2 முதல் மே 29 வரை நடத்தப்படும் ஆர்.டி.இ., ஒதுக்கீடு சேர்க்கை மேற்கொள்ளப்படவில்லை. பெற்றோர் பலரும், குழந்தைகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். அதேநேரம், தகுதியான மாணவர்கள், இத்திட்டத்தின் கீழ் உரிமையை இழக்கக் கூடாது என்பதற்காக, சிறப்பு நடைமுறைகளை உள்ளடக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் சுயநிதிப் பள்ளி சார்பாக மாணவர் எண்ணிக்கை மற்றும் நுழைவு நிலை வகுப்பில் ஆர்.டி.இ., 25 சதவீத இடங்களை உறுதிப்படுத்தி 'எமிஸ்' தளத்தில் வெளியிட வேண்டும். அதில், ஏற்கனவே நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கை செய்யப்பட்டுள்ள மாணவர்களில், தகுதியானவர்களிடம் உரிய சான்றுகளைப் பெற்று, 'எமிஸ்' தளத்தில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, பெற்றோர்களை இழந்தோர், ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்வர்கள், மாற்றுத்திறனாளிகள் என எவரேனும் இருந்தால், அவர்களுக்கு முதலில் சேர்க்கை வழங்க வேண்டும். மீதமுள்ள இடங்களுக்கு குலுக்கல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், கல்விக் கட்டணம் செலுத்தியிருந்தால், அந்தத் தொகையை 7 நாட்களுக்குள் முழுமையாக பெற்றோருக்கு திருப்பி வழங்க வேண்டும். இவ்வாறு, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை