அரசு சுவரில் விளம்பரம் அழிப்பு தினமலர் செய்தி எதிரொலி
வால்பாறை : 'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறை செல்லும் ரோட்டில் இருந்த தடுப்பு சுவற்றில் எழுதப்பட்ட அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கும் பணி நடக்கிறது.ஆழியாறில் இருந்து, வால்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் இருந்த தடுப்பு சுவற்றில், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கட்சி விளம்பரம் எழுதி அலங்கோலப்படுத்தினர்.இது தவிர, வால்பாறையிலிருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் ரோட்டிலும் அத்துமீறி சுவர் விளம்பரம் எழுதியுள்ளனர். இதனால், வால்பாறைக்கு வாகனங்களில் வருவோர் கவனம் சிதறி விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது.வால்பாறை மலைப்பகுதியில் அரசு சுவர்களில் விதிமுறை மீறி ஒட்டப்பட்டுள்ள, விளம்பர போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களையும் உடனடியாக அகற்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கான தொகையை விளம்பரம் செய்துள்ள கட்சி நிர்வாகிகளிடமே வசூலிக்க வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு அரசு சுவற்றில் விளம்பரம் செய்வதால், சுவர் அலங்கோலமாக மாறி வருகிறது.தி.மு.க.,வினர் செய்துள்ள விளம்பரங்கள் ஜூன் 3ம் தேதிக்கு பின் அழிக்கப்படும். வால்பாறையின் இயற்கை அழகிற்கு கேடு விளைவிக்கும் வகையில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.