மழைக்கு பின் குளுகுளு சீசன்; சுற்றுலா பயணியர் குதுாகலம்
வால்பாறை; வால்பாறையில் தொடர் மழைக்கு பின், குளுகுளு சீசன் நிலவுவதால், சுற்றுலா பயணியர் வருகை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். ஆழியாறு வழியாக வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர், கவியருவி, அட்டகட்டி வியூ பாயின்ட், ஆர்கிட்டோரியம், சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மலைப்பாதையில், வரையாடு, சிங்கவால் குரங்குகள், யானைகள், காட்டுமாடு, உள்ளிட்ட வனவிலங்குகளை சுற்றுலா பயணியர் நேரில் கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில், வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கி தொடர்ந்து பெய்தது. கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக பெய்த கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக சுற்றுலா பயணியர் வருகை வெகுவாக குறைந்தது. கடந்த நான்கு நாட்களாக மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து வெயில் நிலவுகிறது. சமவெளிப்பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், வால்பாறையில், கடந்த நான்கு நாட்களாக லேசான வெயிலுடன் கூடிய ரம்மியமான சிதோஷ்ணநிலை நிலவுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது குளுகுளு சீசன் நிலவுவதால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.