கோவை மாநகராட்சி பள்ளிகளில் பகல் நேர காவலர்கள் நியமனம்
கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளில், பகல் நேரக் காவலர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பள்ளி சொத்துக்களையும் பாதுகாக்கவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் தற்போது 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் பள்ளி பாதுகாப்புக்கு, ஒவ்வொரு பள்ளிக்கும் பகல் நேரக் காவலர்களை நியமிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் அனைத்து மண்டலங்களிலும் உள்ள பள்ளிகளில், ஒப்பந்த அடிப்படையில் காவலர்களை நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட, 28 பள்ளிகளுக்கு 29 காவலர்கள்; மேற்கு மண்டலத்துக்குட்பட்ட 33 பள்ளிகளுக்கு 31 காவலர்கள்; வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 28 பள்ளிகளுக்கு 29 காவலர்கள்; தெற்கு மண்டலத்துக்குட்பட்ட 24 பள்ளிகளுக்கு 25 காவலர்கள்; மத்திய மண்டலத்துக்குட்பட்ட 35 பள்ளிகளுக்கு, 32 காவலர்கள் என மொத்தம், 146 பகல் நேரக் காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.