மேலும் செய்திகள்
மாற்று உரங்களை வாங்க நிர்ப்பந்தம்
12-Oct-2025
அன்னூர்: 'இணைப் பொருட்கள் வாங்கும்படி விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது,' என, உர விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்னூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை : அன்னூர் வட்டாரத்தில், ஆறு தனியார் உர விற்பனை நிலையங்களிலும், 17 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவ., 3ம் தேதி நிலவரப்படி, யூரியா 51 டன், டி.ஏ.பி., 51 டன், கூட்டு உரம் 67 டன் இருப்பில் உள்ளது. அன்னூர் வட்டாரத்தில் பெருமளவு வாழை, மஞ்சள், மரவள்ளி, சோளம், மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர் வகைகள் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் தங்களின் மண்வள அட்டை உர பரிந்துரைப்படி உரம் இடவும், பயிரின் தேவை அடிப்படையில் உரம் இடவும் அறிவுறுத்தப்படுகிறது. யூரியா மற்றும் இதர உரங்கள் விவசாய தேவைக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். பயிரின் நிலை, பரப்பளவு, பயிரின் தற்சமய தேவையின் அடிப்படையில் மட்டுமே உரம் வழங்கப்பட வேண்டும். உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் இணை பொருட்கள் எதுவும் வாங்க கட்டாயப்படுத்த கூடாது. மேலும் விற்பனையாளர்கள், அனுமதிக்கப்பட்ட உரங்களை மட்டுமே விற்க வேண்டும். உரங்களின் விலை மற்றும் இருப்பு விவரங்களை, விவசாயிகளுக்கு தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டும், எனவும், அனைத்து உர விற்பனை நிலையங்களுக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
12-Oct-2025