தடயங்கள் சேகரிப்பதில் அயன், ஆதவ் கில்லாடி
காவல்துறையில் வழக்கு விசாரணையில் முக்கிய பங்கு வகிப்பது மோப்ப நாய்கள். இவற்றை பராமரிக்கும் பிரிவில் பெரும்பாலும் ஆண் போலீசாரே இருப்பர். இத்துறையில் எங்களாலும் ஈடுபட முடியும் என இரு பெண் போலீசார் சாதித்துக் காட்டி வருகின்றனர். கோவை மாநகர மோப்ப நாய் பிரிவில், நாய்களுக்கு பயிற்சி, கையாளுவது ஆகிய பணிகளை கவிப்பிரியா, பவானி ஆகியோர் திறம்பட பணிபுரிந்து வருகின்றனர். திருப்பூர் செல்லம் நகரைச் சேர்ந்த கவிப்பிரியா, 27, பி.எஸ்சி., (இயற்பியல்), பி.எட்., முடித்தவர். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பவானி, 28, இளங்கலை(ஆங்கிலம்), இளங்கலை(உடற்கல்வி) ஆகியவற்றை முடித்தவர். குற்றச்சம்பவத்தை கண்டறிவதில் நிபுணரான ஆதவ் என்கிற மோப்ப நாயை கவிப்பிரியா, வெடி பொருட்களை மோப்பம் பிடிப்பதில் நிபுணரான அயன் என்கிற மோப்பநாயை பவானி கையாள்கின்றனர். கவிப்பிரியா கூறுகையில், ''போலீஸ் பணிக்கு வரும் முன், டீச்சராக இருந்தேன். இளம் வயது முதல் நாய்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, வீட்டில் நாட்டு நாய்கள் வளர்த்து வந்தேன். ஆயுதப்படையில் பணிபுரிந்தபோது, அப்போதைய கமிஷனர் பாலகிருஷ்ணன், மோப்பநாய் பிரிவில் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்க அறிவுறுத்தினார். நாய்கள் மீதிருந்த ஆர்வத்தால், இப்பிரிவில் சேர்ந்தேன். ''எனக்கு ஒரு நாய்க்குட்டி கொடுக்கப்பட்டது; முழு பயிற்சி கொடுத்தேன். ஒவ்வொரு முறை குற்றச்சம்பவங்கள் நடக்கும்போதும், அங்கு சென்று சோதனை செய்யும்போது பல்வேறு சவால்கள் இருக்கும். பல தடயங்களை சேகரித்து கொடுத்துள்ளேன். பல குற்றச்சம்பவங்களில் நான் கண்டறிந்து கொடுத்த தடயங்கள் துல்லியமாக இருந்துள்ளன. அதற்காக, பரிசுகளும் பெற்றுள்ளேன். ஆதவ் உடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. அவை நாய்கள் அல்ல; நண்பர்கள். பயிற்சி அளிக்கும்போது பல்வேறு புது அனுபவங்கள் கிடைக்கும். கொலை வழக்குகளில் பல தீர்வுகளை வழங்கியுள்ளேன்,'' என்றார்.
'அயன் ரொம்ப திறமைசாலி'
பவானி கூறுகையில், ''துவக்கத்தில் நாய்களை பழக்கப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. வி.ஐ.பி.,க்கள் வரும்போது அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டியிருக்கும். அப்பணி மிகவும் கடினமாக இருக்கும். சிறு தவறு நேராமல் சோதனை செய்ய வேண்டும். விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும்போது பிரச்னை இருக்காது. தற்போது வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகம் வருகின்றன. என்னுடன் இருக்கும் அயன் ரொம்ப திறமைசாலி. நாய்கள் மீது ஏற்பட்ட பற்று காரணமாகவும், இத்துறையில் பெண்கள் இல்லை என்பதாலும் சாதித்து காட்டுவதற்காக இணைந்தேன்,'' என்றார்.