ஆற்றில் குளிப்பதற்கு தடை; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
வால்பாறை: வால்பாறை, கூழாங்கல்ஆற்றில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாபயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர். வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த கனமழையால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அருவிகளிலும் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது, மழைப்பொழிவு வெகுவாக குறைந்து லேசான சாரல்மழை மட்டுமே பெய்து வருகிறது. இருப்பினும், சுற்றுலாபயணியர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கபட்டுள்ளதால், அருவி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளை ரசித்து மட்டும் செல்கின்றனர். இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கிறது. சுற்றுலாபயணியர் கூறுகையில், 'வால்பாறையில் சிதோஷ்ண நிலை மாற்றத்தால், ரம்யமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை கண்டு ரசிக்கவும், ஆறு மற்றும் அருவியில் குளிக்கவும் சுற்றுலாபயணியர் விரும்புகின்றனர். ஆனால், சுற்றுலாபயணியர் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மழைப்பொழிவு குறைந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.