வாழைத்தார் வரத்து சரிவு :விலை உயர்வால் மகிழ்ச்சி
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்த நிலையில் விலை உயர்ந்துள்ளது. கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகள் வருகை அதிகம் உள்ளதால், வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. தினசரி மார்க்கெட்டில் நேற்று செவ்வாழை கிலோ - - 70, நேந்திரன் --- 35, பூவன் --- 35, கதளி -- 40, ரஸ்தாளி --- 45 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட, தற்போது செவ்வாழை மற்றும் ரஸ்தாளி கிலோ - 5 ரூபாயும், நேந்திரன் மற்றும் கதளி -- 10 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் நேற்று, வாழைத்தார் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும், வெளியூர் வரத்தும் இல்லை. இதனால், வாழைத்தார்கள் விலை உயர்ந்து காணப்பட்டது,' என்றனர்.