விரைவில் படகு சவாரி துவங்கும் :நகராட்சி அதிகாரிகள் தகவல்
வால்பாறை: சுற்றுலா பயணியரின் பொழுதுபோக்கு வசதிக்காக விரைவில் படகுசவாரி துவங்கப்படும், என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வால்பாறை வரும் சுற்றுலா பயணியரின் பொழுதுபோக்கு வசதிக்காக, நகராட்சி ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. படகு சவாரிக்கு கட்டணமாக, 40 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், படகு இல்லத்தில் இருந்த தண்ணீரில் கழிவு நீர், பிளாஸ்டிக் கழிவுகள் சங்கமித்தன. படகு இல்லத்தில் தேங்கிய கழிவுகளை அகற்ற வேண்டும் என உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், கடந்த மாதம், படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்பட்ட கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால், நான்கு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை படகு இல்லத்தை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். நகராட்சி பொறியாளர் ஆறுமுகத்திடம் கேட்ட போது, ''வால்பாறையில் மழை பெய்வதால், படகு இல்லம் துார்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மழைக்கு பின் படகு இல்லம் முழுமையாக துார்வாரப்பட்டு, மீண்டும் தண்ணீர் தேக்கப்படும். மேலும், படகுஇல்லத்தில் சேதமடைந்த நடைபாதையும் சீரமைக்கப்பட்ட பின் விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,'' என்றார்.