உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தங்கும் விடுதிகளில் கேமரா கட்டாயம்! குற்றங்களை தவிர்க்க போலீசார் அறிவுரை

தங்கும் விடுதிகளில் கேமரா கட்டாயம்! குற்றங்களை தவிர்க்க போலீசார் அறிவுரை

வால்பாறை: வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகளில், கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா ஸ்தலங்களில் இ-பாஸ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வால்பாறைக்கு இ-பாஸ் நடைமுறை இல்லாததால் சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணியர் தங்கி செல்ல வசதியாக, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள் அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள பெரும்பாலான தங்கும் விடுதி, ரிசார்ட்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், தங்கும் விடுதிகளில் தங்கி செல்லும் சுற்றுலா பயணியரால் குற்றசம்பவங்கள் நடந்தாலும், கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். போலீசார் கூறியதாவது: சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, தங்கும் விடுதிகளில் ஏற்கனவே அறிவுறுத்தியபடி கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். விடுதிகளில், 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆண், பெண்கள் தங்கினால், போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் யாரையும் தங்குவதற்கு அனுமதிக்கூடாது. வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், தங்கும் விடுதிகள் நடத்தி வருபவர்கள் உரிய ஆவணங்களை நாள் தோறும் போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான், வெளியூரில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு, வால்பாறை வந்து பதுங்குவோரை கண்டுபிடிக்க முடியும். இதுபற்றி, விடுதி உரிமையாளர்களுக்கு பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில விடுதிகளில் போலீஸ் அறிவுரையை பின்பற்றுகின்றனர். மற்றவர்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !