அடையாள அட்டை எண் வழங்க முகாம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
ஆனைமலை,; ஆனைமலை வட்டாரத்தில், விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்குவதற்காக அந்தந்த கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.ஆனைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ், மின்னணு முறையில் விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, அனைத்து துறை பயன்களை ஒற்றை சாளர முறையில் பெறலாம்.ஒவ்வொரு முறை விண்ணபிக்கும் போதும் ஆவணங்கள் சமர்பிக்க வேண்டியதில்லை. அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும்.கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிர்க்கடன் பெறும் வசதி; ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பணபரிமாற்றம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்.அக்ரிஸ்டேக் செயலியில் தங்களது ஆதார் அட்டை எண், விவசாய நில உடைமை சர்வே எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண் ஆகியவற்றை வரும், 20ம் தேதிக்குள் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.இதை உள்ளீடு செய்த உடன், அப்போது மத்திய அரசின் தங்களுக்கான அடையாள எண் உருவாகும். அந்த எண்ணை தாங்கள் அலுவலரிடம் கோரி பெற்றுக்கொள்ளலாம். அந்த கிராமங்களில், வேளாண் உதவி அலுவலர்கள், தோட்டக்கலை துறை உதவி அலுவலர்கள், கிராம ஊராட்சிகளில் உள்ள மகளிர் குழுக்களை கொண்டு சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.