காட்டுக்குள் வந்தால் கார் பறிமுதல்; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
வால்பாறை; வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சுற்றுலாபயணியர் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறையில் பருவமழை பெய்யும் நிலையில், வனவளம் பசுமையாக இருப்பதால், விலங்குகள் அதிகமாக வெளியில் நட மாடுகின்றன. புதுத்தோட்டம், நல்லமுடி, தோணிமுடி, ைஹபாரஸ்ட், ஊசிமலை, கருமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் நுாற்றுக்கு மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன. புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடுகளும் நட மாடுகின்றன. விடுதிகளில் இரவில் தங்கும் சுற்றுலா பயணியர் ஆபத்தை உணராமல், விலங்குகள் நடமாடும் பகுதிக்குள் அத்துமீறி செல்கின்றனர். விலங்குகளை நேரில் காட்டுவதாக கூறி சிலர் அழைத்து சென்று பணம் பறிக்கின்றனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், வன விலங்குகள் நடமாடும் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். ரோட்டில் நடமாடும் விலங்குகளுக்கு உணவு வழங்குவது, மலைப்பாதையில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். விடுதிகளில் தங்குபவர்கள் இரவு நேரத்தில் விலங்குகளை காணலாம் என்ற ஆசையில், காட்டுக்குள் நுழைவது ஆபத்து. அத்துமீறல் கண்டறியப்பட்டால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, விடுதி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்க சுற்றுலா பயணியர் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.