உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணவரை தாக்கிய மனைவி உறவினர்கள் மீது வழக்கு

கணவரை தாக்கிய மனைவி உறவினர்கள் மீது வழக்கு

கோவை; கணவரை தாக்கிய மனைவி, மாமியார், மைத்துனர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 35. இவரது மனைவி ரஞ்சிதா. தங்கராஜ், கணபதியில் நூல் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். அதில் ரஞ்சிதாவும் வேலை பார்த்தார். கருத்து வேறுபாடு காரணமாக, ஆறு மாதங்களுக்கு முன், ரஞ்சிதா தனது குழந்தையை அழைத்துக் கொண்டு வேலூருக்கு சென்று, பெற்றோர் வீட்டில் தங்கி, துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்காக தங்கராஜ், திருவண்ணாமலை சென்றார். விடுமுறை முடிந்து கோவை வரும் வழியில், வேலூர் பஸ் ஸ்டாண்டில் மனைவி ரஞ்சிதாவை சந்திக்க விரும்புவதாக, போனில் தெரிவித்தார். கடந்த 17ம் தேதி ரஞ்சிதா, கணவரை சந்திக்க வேலூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். அங்கு தங்கராஜ், குழந்தைகளின் படிப்பு, நலம் குறித்து விசாரித்தார். பின்னர் தன்னுடன் கோவை வருமாறு அழைத்தார். ரஞ்சிதா மறுத்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தங்கராஜ், ரஞ்சிதாவை தாக்கினார். இதனால் ரஞ்சிதா, தாலியை கழட்டி வீசி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். நேற்று முன்தினம், தங்கராஜ் தனது நிறுவனத்தில் இருந்தார். அப்போது அங்கு ரஞ்சிதா, அவரது சகோதரர் பரமேஷ், தாய் ஜெயந்தியுடன் வந்தார். மூவரும் தங்கராஜ் உடன் தகராறில் ஈடுபட்டனர். தங்கராஜை அங்கிருந்த இரும்பு ராடால் தாக்கினர். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.ஊழியர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் ரஞ்சிதா, பரமேஷ், ஜெயந்தி ஆகியோர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ