வேளாண் பல்கலையில் சான்றிதழ் சரிபார்ப்பு; 7.5 சதவீத ஒதுக்கீடு மாணவர்களுக்கு அழைப்பு
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை இளநிலை அறிவியல் சேர்க்கையில், முதல்கட்ட கலந்தாய்வில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் தொழிற்கல்வி இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.வேளாண் பல்கலையின் வேளாண்மை மற்றும் மாணவர் சேர்க்கைக்கான டீன், வெங்கடேச பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:வேளாண் பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையின் வேளாண் பிரிவுக்கும் ஒரே விண்ணப்பம் வழியாக, இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடக்கிறது.பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 15ம் தேதி வரை நடந்தது; 12,200 மாணவர்கள் பங்கேற்றனர். வேளாண் பல்கலையில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 395 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.அரசுப் பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை பயின்ற தகுதியான மாணவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படும். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தரவரிசை, விருப்பப்பாடம் அடிப்படையில் தற்காலிக சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.தொழிற்கல்வி பிரிவு இட ஒதுக்கீட்டில், 225 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த ஒதுக்கீட்டுக்கும், தகுதியானவர்களுக்கு தற்காலிக சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.தற்காலிகமாக தேர்வு பெற்றவர்கள் தங்களின் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதி, மாற்றுச் சான்றிதழ்களை, கோவை வேளாண் பல்கலையில் நாளை (19ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tnau.ucanapply.comஎன்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 9488635077, 9486425076 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.