விமான நிலையத்தில் இறங்க முடியாமல் வட்டமடித்த விமானங்கள்
கோவை; கோவையில் நேற்று காலை கடும் மூடுபனி நிலவியதால், விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.மூடுபனி காரணமாக, வானிலை மிக மோசமாகக் காணப்பட்டது. டில்லியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானம், 5:35 மணிக்குத் தரையிறங்க வேண்டிய நிலையில், ஓடுபாதை சரியாகத் தெரியாததால், தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து, விமானம் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது. இந்த விமானம், கொச்சியில் இருந்து மீண்டும் கிளம்பி, 10:00 மணிக்கு கோவை வந்தது.தொடர்ந்து, மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம், விமானம் 8:25 மணிக்கு தரையிறங்க வேண்டும். அப்போதும் ஓடுபாதை தெரியாத அளவுக்கு, பனிமூட்டமாக இருந்தது. அரை மணி நேரம் வானில் வட்டமடித்தபடியே இருந்த அந்த விமானம், அரை மணி நேரத்துக்குப் பின் தரையிறங்கியது.கோவையிலிருந்து மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், 45 நிமிடங்கள் தாமதமாக 9:45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. மோசமான வானிலை காரணமாக சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு, கோவையில் இருந்து புறப்படவிருந்த ஆறு விமானங்கள், அரை மணி நேரம் முதல் 1.45 மணி நேரம் வரை தாமதமானது. ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
விமான பயணிகள்
கோவை சர்வதேச விமான நிலையத்தை, தினசரி பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 6ம் தேதி, உள்ளூர் விமான பயணிகளின் எண்ணிக்கை 9,681 ஆக இருந்தது. சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை 1,125 ஆக இருந்தது. மொத்தப் பயணிக ளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 806 ஆக இருந்தது.