திருட்டு பைக் என கூறி பைக் பறிமுதல்; எஸ்.பி.,யிடம் கல்லுாரி மாணவர் புகார்
கோவை : நண்பரின் பைக்கை ஓட்டி சென்ற மாணவரை, வழிமறித்து திருட்டு பைக் எனக்கூறி போலீசார் பறிமுதல் செய்து சென்றதாக, கல்லுாரி மாணவர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார்.சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் ராகுல் பிரசாத் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:நான் எனது நண்பர்கள் தமிழ்செல்வன், தரணீஷ் ஆகியோருடன் சேர்ந்து நரசிம்மநாயக்கன்பாளையம் சென்று விட்டு, தமிழ்செல்வனின் இருசக்கர வாகனத்தில் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.அப்போது, போலீசார் என்னை நிறுத்தி மது குடித்துள்ளோமா என சோதனை செய்தனர். மது போதையில் இல்லை என தெரிந்தும், என்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என கேட்டனர். பணம் இல்லை என கூறியதால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நான் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், திருட்டு வாகனம் எனக்கூறி, நரசிம்மநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எடுத்து சென்றனர்.காலையில் நான் போலீஸ் ஸ்டேஷன் சென்று கேட்ட போது, நீதிமன்றத்தில் விவரங்களை அறிந்துகொள்ளும்படி தெரிவித்தார். பின்னர், மாலையில் வாகனத்திற்கு ரூ. 1500 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் 'சலான்' அனுப்பினர். அதிகாலை பறிமுதல் செய்த வாகனம் வேறு ஒரு இடத்தில் இருப்பது போல், மறுநாள் மதியம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நரசிம்மநாயக்கன் பாளையம் போலீசார் சட்ட விரோதமாக, எனது வாகனத்தை பறித்துக்கொண்டு, வேண்டுமென்றே அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.