| ADDED : செப் 10, 2026 08:21 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகத்தில், வால்பாறை பழங்குடியின மக்கள் தயாரித்த பொருட்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சப் – கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். பழங்குடியின குடியிருப்பை சேர்ந்தவர்கள் குழு அமைத்து, வால்பாறையில் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர். கல்ராணி மகளிர் சுய உதவிக்குழு தலைவர் ராஜலட்சுமி கூறியதாவது: வால்பாறை கல்லார் தெப்பக்குள மேடு வனக்கிராமத்தை சேர்ந்த கல்ராணி சுய உதவிக்குழுவின், ஆனைமலை பழங்குடியினர் பசுமை அங்காடி வால்பாறை ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே நடத்தப்படுகிறது. இங்கு, தேன், சாம்பிராணி, ஏலக்காய், மிளகு, சீயக்காய், காட்டில் கிடைக்கும் புளி போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோவையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் வாயிலாக மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக தயாரிப்பதற்காகவும், சரியான முறையில் பாட்டில் மற்றும் பேக்கிங் செய்வதற்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. வாழ்வாதாரம் மேம்பட இதுபோன்ற முயற்சி கைகொடுக்கும். இவ்வாறு, கூறினார். சப் – கலெக்டர் கூறுகையில், ‘‘பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில், மாவட்ட நிர்வாகம் வாயிலாக தேவையான உதவிகளை செய்து தர முயற்சிகள் எடுக்கப்படும்,’’ என்றார். வனத்துறையினர், ‘சூழல் அங்காடிகளில் இந்த பொருட்களை விற்பனை செய்து பயன் பெறலாம். பழங்குடியின மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறோம்,’ என்றனர்.