மக்களுக்கான படைப்புகளே காலம் கடந்தும் நிற்கும்!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின், 124வது இலக்கியச் சந்திப்பு, லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. இலக்கிய வட்டத் தலைவர் அம்சப்ரியா தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார்.கவிஞர் சதீஷ் கணேசன் எழுதிய 'ஊர்க்குருவி கவிதை' புத்தகத்தை, கவிஞர் கவிதாசன் வெளியிட்டார். கவிஞர் நாகராஜன், எழுத்தாளர் முகில்தினகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.கவிஞர் நிழலி எழுதிய 'கோடை விரும்பிகள்', 'இன்னும் முளைக்காத காடு' இரண்டு புத்தகங்களை எழுத்தாளர் ரவிவாமனன் வெளியிட்டார். அதனை ரமேஷ்குமார், ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.எழுத்தாளர் ராஜகோபால் எழுதிய 'புதியதோர் உலகம் செய்வோம்' புத்தகத்தை கவிஞர் ஞானசேகரன் அறிமுகப்படுத்திப் பேசினார்.கவிஞர் கவிதாசன் பேசுகையில், ''இன்றைய படைப்பாளிகள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க வேண்டும். மக்களுக்காக எழுதும் படைப்புகளே காலம் கடந்தும் நிற்கும். அறிதல், புரிதல், தெளிதல், சிந்தித்தல் எனப் பல நிலைகள் உள்ளன. ஒரு வாசகன் இவற்றை ஆழ்ந்து கடக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, கரகாட்டம், கோலாட்டம் என, கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கவிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.