உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேம்பால ஓடுதளத்தில் சேதம்; விபத்து ஏற்படும் அபாயம்

மேம்பால ஓடுதளத்தில் சேதம்; விபத்து ஏற்படும் அபாயம்

மேம்பால தளம் சேதம்

உடுமலை, தளிரோடு மேம்பாலத்தின் ஓரங்களில் தரைதளம் சிதிலமடைந்து பெயர்ந்து வருகிறது. இரவு நேரங்களில் சைக்கிள்களில் மேம்பாலத்தில் செல்வோர் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும்போது சிதிலமடைந்த தரைதளத்தால் தடுமாறுகின்றனர். தற்போது சிறியதாக பெயர்ந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நாச்சிமுத்து, உடுமலை.

வடிகால் வசதி வேண்டும்

உடுமலை, உழவர் சந்தை ரோட்டில் மழைநீர் தேங்குவதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. உழவர் சந்தை அருகே மழைநீர் குளமாக இருப்பதால் சந்தைக்கு வருவோரும் வாகனங்களை நிறுத்த முடியாமல் பார்க்கிங் பிரச்னை ஏற்படுகிறது. ரோட்டில் வடிகால் வசதியை முறைப்படுத்த வேண்டும்.- ராகவன், உடுமலை.

ரோட்டில் கழிவுகள்

உடுமலை, தாராபுரம் ரோட்டில் தனியார் உணவகங்களிலிருந்து கழிவுகள் ரோட்டில் கொட்டப்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும்போது கழிவுகளின் துர்நாற்றம் மிகுதியாக வீசுகிறது. மேலும், அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராதா, உடுமலை.

பள்ளி அருகே குப்பை

உடுமலை ஒன்றியம் காரத்தொழுவு அரசு பள்ளி அருகே, திறந்த வெளியில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. கழிவுகளில் மழைநீர் தேங்கி அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கொசுத்தொல்லை அதிகரிப்பதால், அப்பகுதியில் சென்றுவரும் பள்ளி குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படும் சூழலும் ஏற்படுகிறது.- வெங்கடேஷ், காரத்தொழுவு.

போக்குவரத்து நெரிசல்

வால்பாறை நகரின் முக்கிய பகுதிகளில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் அதிக அளவு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. இதனால், ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன், போக்குவரத்து பாதிப்படைகிறது. இதை போலீசார் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -விஷால், வால்பாறை.

ரோட்டோரத்தில் குப்பை

கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் பின் பக்கம் உள்ள ரோட்டின் ஓரத்தில், அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியில் செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரம் பாதிக்கிறது. எனவே, குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க சி.சி.டி.வி., கேமரா பொருத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -மோகன், கிணத்துக்கடவு.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

உடுமலை, வ.உ.சி., வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. தீபாவளி நேரத்தில் அப்பகுதியில் மக்கள் கூட்டமும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வாகனங்கள் ரோட்டின் பாதி வரை நிற்பதால், மக்கள் நடந்து செல்வதற்கும் வழியில்லாமல் சிரமப்படுகின்றனர்.- பழனிச்சாமி, உடுமலை.

விதிமீறும் வாகனங்கள்

பொள்ளாச்சி, தேர்முட்டி பகுதியில் 'ஒன் வே'யில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் பயணிப்பதால், அவ்வழியில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து நடக்கவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, இதை போலீசார் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -அந்தோணி, பொள்ளாச்சி.

அடிப்படை வசதி தேவை

வால்பாறை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், இங்கு வரும் பயணியர் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, பயணியர் நலன் கருதி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.-- -விகாஸ், வால்பாறை.

ரோட்டில் பள்ளம்

கிணத்துக்கடவு, பகவதிபாளையம் செல்லும் ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியில் இரவு நேரத்தில் பைக்கில் செல்லும் ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். சிலர் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த ரோட்டில் உள்ள பள்ளத்தை விரைவில் சரி செய்ய வேண்டும்.-- -சம்பத், கிணத்துக்கடவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை