கனமழையால் நிரம்பி ததும்பும் அணைகள்; மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பரம்பிக்குளம், ஆழியாறு, வால்பாறை சோலையாறு அணைகள் முழு கொள்ளளவும் நீர் நிரம்பியுள்ளதால், மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 4.25 லட்சம் ஏக்கர் பாசன பெறுகிறது. இத்திட்டத்தில் உயிர் நாடியாக விளங்கும் பரம்பிக்குளம் அணை, 72 அடி உயரம் கொண்டது. மொத்தம், 17 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்டது. பருவமழையால், பரம்பிக்குளம் அணை கடந்த ஜூலை, 26ம் தேதி நிரம்பியதும், மூன்று மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டது.அதன்பின், மழை பொழிவு இல்லாததால், நீர்மட்டம் மெல்ல சரிய துவங்கியது. கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்வதால், இரண்டாவது முறையாக முழு கொள்ளளவும் நிரம்பி, மதகுகள் வழியாக, உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நேற்று நிலவரப்படி அணை நீர்மட்டம், 71.61 அடியாக இருந்தது. வினாடிக்கு, 4,695 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், வினாடிக்கு, 4,855 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சோலையாறு அணையில், 160 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்து, கடந்த ஜூன் 26ம் தேதி நிரம்பியது. தொடர்ந்து பெய்த கனமழையால் சோலையாறு அணை ஏற்கனவே ஐந்து முறை நிரம்பியது. கடந்த மூன்று நாட்களாக வால்பாறையில் கனமழை பெய்வதால், சோலையாறு அணை நேற்று காலை, ஆறாவது முறையாக நிரம்பியது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.77 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 4,060 கனஅடி நீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 2,572 கனஅடி நீர் வீதம் வெளியேற்றப்படுகிறது. ஆழியாறு அணையில், 120 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்து, முழு கொள்ளளவை எட்டியதால், கடந்த ஜூலை 24ம் தேதி 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின், நீர்மட்டம் சிறிது குறைந்தது. தற்போது மீண்டும் மழை தீவிரமடைந்ததால், நேற்று, 119 அடியாக நீர்மட்டம் உயர்ந்த நிலையில், வினாடிக்கு, 1,800 கனஅடி நீர் வரத்தாக இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, ஏழு மதகுகள் வழியாக வினாடிக்கு, 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஜூன் 16ல் அணையின் 90 அடி உயரத்துக்கு நீர் நிரம்பியது. கடந்த, 64 நாட்களாக ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி, அணையில், 88.29 அடி நீர் மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 752 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து, ஆறு மற்றும் கால்வாயில், மொத்தம், 768 கனஅடி நீர் வெளியேறியது. அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம், ஆற்றோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மழையளவு நிலவரம்
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,): சோலையாறு - 116, பரம்பிக்குளம் - 75, ஆழியாறு - 32, வால்பாறை - 104, மேல்நீராறு - 160, கீழ்நீராறு - 124, காடம்பாறை - 35, மேல்ஆழியாறு - 9, சர்க்கார்பதி - 33, வேட்டைக்காரன்புதுார் - 36, மணக்கடவு - 15, துாணக்கடவு - 83, பெருவாரிப்பள்ளம் - 90, நவமலை - 17, பொள்ளாச்சி - 9 என்ற அளவில் மழை பெய்தது.