இயற்கை விவசாயம் குறித்து மாணவியருக்கு செயல்விளக்கம்
ஆனைமலை: ஆனைமலை அருகே வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கிராமத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில், தென்சங்கம்பாளையம் இயற்கை விவசாய பண்ணையில், விவசாயி உமாமகேஸ்வரி, இயற்கை விவசாயத்தின் நன்மைகள், இயற்கை கரைசல்கள் தயாரிப்பு குறித்து செயல்விளக்கமளித்தார். விவசாயி பேசியதாவது: இன்றைய வேளாண்மையில், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மண் வளம் குறைதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மனித உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், இயற்கை வேளாண்மை என்பது நிலையான வேளாண்மை, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் மனித ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வேளாண்மை முறையாகும். இயற்கை வேளாண்மையில் பசுமை உரங்கள், மாட்டு சாண உரம், கம்போஸ்ட், வெர்மிகம்போஸ்ட் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதனால், மண்ணின் உயிரியல் செயல்பாடுகள் அதிகரித்து மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாததால் மண், நீர், காற்று மாசுபாடு குறைகிறது. பூச்சிகள், பறவைகள், நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. பயிரிடும் முன் மண் பரிசோதனை செய்து மண்ணின் நிலையை அறிந்து செயல்பட வேண்டும். பயிர் சுழற்சி, கலப்பு பயிரிடுதலை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, பேசினார்.