தினமலர் - பட்டம் மெகா வினாடி - வினா போட்டி துவக்கம்; பதில் சொல்லி பரிசை வெல்ல மாணவர்கள் ஆர்வம்
பொள்ளாச்சி : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற, மெகா வினாடி - வினா போட்டி பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை, பட்டம் இதழ் தினமும் பள்ளிகளில் கிடைக்கும். இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை விரிவுப்படுத்தும் வகையிலும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தவும், 2018ம் ஆண்டு முதல், 'மெகா வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்.,கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ - ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜன்சி உள்ளது.கேசவ் வித்யா மந்திர் பள்ளியில், நேற்று நடந்த வினாடி - வினா போட்டியில், 300 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேரை, எட்டு அணிகளாக பிரித்து, இறுதிச்சுற்று போட்டி நடந்தது.மூன்று கட்டங்களாக நடந்த போட்டியில், முதல் பரிசை, 'எச்' அணியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவியர் துர்கா பாரதி, லக் ஷனா ஆகியோர் வென்றனர்.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பள்ளி செயலாளர் ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதி போட்டியில் பங்கேற்பர்.இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும். மிகவும் பயனுள்ளது
பள்ளி முதல்வர் பிரகாஷ் கூறுகையில், ''தினமலர் 'பட்டம்' இதழ், மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. பொது அறிவில் மாணவர்கள் சிறந்து விளங்கவும், அவர்கள் படித்ததை நினைவுக்கு கொண்டு வரும் வகையில் உள்ளது. அறிவு திறமை மேம்பாடு, மாணவர்களிடம் திறமை வெளிப்படுத்துவதில் ஆரோக்கியமான போட்டியால், திறமைகளை வெளிக்கொணர்கிறது,'' என்றார்.
'பட்டம்' இதழ் தகவல் 'பொக்கிஷம்'
துர்காபாரதி: பாட புத்தகங்களை தாண்டி, பொது அறிவுக்கான கூடுதல் விஷயங்களை தெரிந்து கொள்ள, 'பட்டம்' இதழ் உதவியாக உள்ளது. அதில், வரும் தகவல்களை குறிப்பெடுத்து வைத்துள்ளேன்.இறுதி போட்டியிலும் வெல்வதை இலக்காக கொண்டு, மேலும் நன்றாக தகவல்களை தேடி படித்து தயாராவேன்.'பட்டம்' வாசிப்பால், பாடங்கள் படிப்பது எளிதாகியுள்ளது.லக் ஷனா: 'பட்டம்' இதழில் வரும் அறிவியல் உள்ளிட்ட பலவிதமான தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. தினமும் விரும்பி படிக்கிறேன். 'பட்டம்' இதழ் தகவல் பொக்கிஷமாக உள்ளது. பல புதிய தகவல்களை தினமும் படிப்பதால் பொது அறிவை வளர்த்துக்கொள்ள முடிகிறது. இதனால், வினாடி - வினா போட்டியில் வெல்ல முடிந்தது. இறுதி போட்டியில் வெல்ல தொடர் முயற்சியும், பயிற்சியும் மேற்கொள்வேன்.