தினமலர் - பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா :சுவஸ்திக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் பரிசை வெல்' வினாடி - வினா போட்டி, பொள்ளாச்சி சுவஸ்திக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறனையும் ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழ், மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட்' ஸ்பான்சராக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அருகே சின்னேரிபாளையம் சுவஸ்திக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'பி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஆறாம் வகுப்பு மாணவி தன்சிகா, எட்டாம் வகுப்பு மாணவி ஜனசுருதி ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், முதல்வர் தமிழரசி, ஆசிரியர்கள் நீலவேணி, சவிதா ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். மொழியாற்றல் வளரும்! பள்ளி முதல்வர் தமிழரசி கூறுகையில், ''எங்களது பள்ளி மாணவர்களிடையே மொழியாற்றலை வளர்க்க 'பட்டம்' இதழ் உதவுகிறது. வாசிப்புத்திறன் மேம்பட உதவுகிறது. 'பட்டம்' இதழில் வரும், 100க்கு 100, ஆசிரியர் குரல், மாணவர் குரல், ரிலாக்ஸ் ப்ளீஸ், டிஜிட்டல் புதுமைகள் உள்ளிட்ட பகுதிகளை மாணவர்கள் விரும்பி படிக்கின்றனர். மாணவர்களின் மொழியாற்றல், சிந்தனை திறனை வளர்ப்பதில் 'பட்டம்' இதழ் முக்கிய பங்கு வகிக்கிறது. வினாடி - வினா போட்டி வாயிலாக மாணவர்களின் சொல்லாற்றல், சொற்களஞ்சியம் பெருகுகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை,'' என்றார்.
'பட்டம்' தகவல் களஞ்சியம்!
மாணவி தன்சிகா: ''பட்டம் இதழ் வாயிலாக நான் பொது அறிவு தகவல்கள், தொழில்நுட்ப தகவல்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தகவல்களை கற்றுக்கொள்கிறேன். மேலும், எனது ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள 'பட்டம்' எனக்கு துணையாக உள்ளது. இதனால், வினாடி - வினாவில் பங்கேற்று வெற்றி பெற முடிந்தது,'' என்றார். மாணவி ஜனசுருதி: ''மொழியாற்றல், வாசிப்புத்திறன் மேம்பட 'பட்டம்' இதழ் உதவுகிறது. மேலும், எனது பொது அறிவு மற்றும் கணித திறனை வளர்க்கவும் 'பட்டம்' கைகொடுக்கிறது. பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட பொதுஅறிவு சார்ந்த பல தகவல்கள் 'பட்டம்' இதழில் ஏராளமாக உள்ளன,'' என்றார்.