தோட்டக்கலை திட்டங்களுக்கு மானியம்; ரூ.12 கோடி வழங்கிய மாவட்ட நிர்வாகம்
கோவை; கோவை மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு, 12.22 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. அதன் வாயிலாக, 7,663 நபர்கள் பயனடைந்துள்ளனர். கோவை கலெக்டர் அறிக்கை: தோட்டக்கலைத்துறை சார்பில், கோவை மாவட்டத்தில் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், தோட்டக்கலை பயிர்கள் பரப்பு விரிவாக்கம், பந்தல் முறை காய்கறி சாகுபடி, இயற்கை வேளாண்மை, நிலப்போர்வை அமைத்தல், நிழல் வலைக்கூடாரம் அமைத்தல், பசுமைக்குடில் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. புதிதாக வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில், ஒரு ஹெக்டேருக்கு (2.471 ஏக்கர்) 24,000 ரூபாய் மானியத்தில் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் வழங்கப்படுகின்றன. நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 4 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் பரப்பு விரிவாக்கம், அங்ககமேலாண்மை, நிலப்போர்வை, வெங்காயப் பட்டறை அமைத்தல், ஒருங்கிணைந்த உர மற்றும் நோய் மேலாண்மை, தேனிப்பெட்டிகள் உள்ளிட்டவை அமைக்க ரூ.12.22 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது; 7,663 நபர்கள் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.