உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு துடிப்பையும் தவற விடாதீர்கள்...ஆரோக்கியத்திற்கான நினைவூட்டல்

ஒரு துடிப்பையும் தவற விடாதீர்கள்...ஆரோக்கியத்திற்கான நினைவூட்டல்

ஒ ரு நொடியும் நிறுத்தாமல், இடைவிடாது இயங்கித் தரும் இதயத் துடிப்பு தான் நம் வாழ்க்கையின் அடிப்படை. உலக இருதய தினம் ஆண்டுதோறும் செப்.,29 ஆம் தேதி உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் கருத்துப்பொருள் - “ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்” ஆகும். குமரன் மருத்துவமனையின் இருதயவியல் மருத்துவர் டாக்டர் கார்த்திக் கூறியதாவது: உலகளவில் இறப்புக்கு முக்கியமான காரணங்களில் முதலிடம் வகிப்பதாக இருப்பது இதய நோய்கள். குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புறம் இரண்டிலும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி இல்லாவாழ்க்கை முறை, அதிக கொழுப்பு மற்றும் பருப்பு சத்து நிறைந்த உணவுகள், புகைபிடித்தல் மற்றும் மதுபான பழக்கம், நீரிழிவு நோயும், உயர்ந்த இரத்த அழுத்தமும், மனஅழுத்தம் மற்றும் துாக்கமின்மை ஆகியவை இருதய நோய் ஏற்படமுக்கிய காரணங்களாகும். இவற்றால் ஏற்படும் அரித்மியா துடிப்பு சீர்கேடு, இதயக்கோளாறு மற்றும் திடீர் இதய அடைப்பு போன்றவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை. “ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்” என்ற கருத்து,இதயத் துடிப்பை சரியாகக் கவனிக்க வேண்டும் என்பதே. திடீர் துடிப்பின் வேகம், மிஞ்சுதல், சீர்கேடு அல்லது அவசர நிலைகள் நிகழும்போது உடனே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்து, இ.சி.ஜி., மற்றும் எக்கோ சோதனைகள் மூலமாக இதய நலத்தை உறுதி செய்வது அவசியம். மற்றொன்று, வாழ்க்கைத்துடிப்பு. வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்பதற்கான உந்துதலையும் இந்த கருப்பொருள் தருகிறது. சில எளிய பழக்க வழக்கங்கள் வாயிலாக இதய நோய்களை தடுக்க முடியும். முறையான உடற்பயிற்சி, சத்தான உணவு, புகைப்பிடித்தலை நிறுத்துதல், ரத்த அழுத்தம் நீரிழிவைக் கட்டுப்படுத்துதல், மனஅழுத்த மேலாண்மை, துாக்க ஓழுங்கு போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இதய நோய் என்பது முதியோருக்கே ஏற்படும் என்ற பழைய கருத்து முற்றிலும் தவறானது. 30 வயதிற்கு குறைவான இளைஞர்களிடையே கூட இதயக்கோளாறுகள் அதிகமாகின்றன. வேலை அழுத்தம், தவறான உணவு பழக்கங்கள், இரவு நேர வாழ்க்கை முறை ஆகியவை இதற்குக் காரணமாகின்றன. உலக இருதய தினம் 2025ன் செய்தி, “ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்” என்ற செய்தி, ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான மிகச்சிறந்த நினைவூட்டல்.நமது குடும்பத்தினரையும், நண்பர்களையும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிநடத்துங்கள்.மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்து, தேவையான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளுங்கள்.ஒவ்வொரு இதயத்துடிப்பும் ஒரு பரிசு. அந்த பரிசை வீணாக் காமல், நாம் என்ன செய்வது என்பதை இன்று தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !