ரோட்டோரத்தில் குப்பையை எரிப்பதால் ஓட்டுநர்கள் அவதி
கிணத்துக்கடவு; பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இதில், கிணத்துக்கடவு அருகே, தாமரைக்குளம் பகுதியில் ரோட்டின் ஓரத்தில் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டு அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகிறது.இதனால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதியில் பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், அவ்வழியே நடந்து செல்பவர்கள் பலருக்கு, மூச்சுத் திணறல், கண் எரிச்சல், சுவாச கோளாறு ஏற்படுகிறது.எனவே, வாகன ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நலன் கருதி, ரோட்டோரம் குப்பை எரிப்பதை தவிர்த்து, குப்பையை கொட்டவும், அதை தரம் பிரித்து முறையாக அகற்றவும் ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.