தேனீக்களால் தாடி வளர்த்த பூச்சியியல் துறை மாணவி!
கோவை: வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை சார்பில் (மே 20) உலக தேனீ தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் பூச்சியியல் துறை தலைவர் முருகன் பேசுகையில், “மக்கள் தேனீக்களைப் பற்றி புரிந்து கொண்டு, தேனீக்களையும் அதன் வாயிலாக பூமியையும் பேணுவது முக்கியம்” என்றார். பல்கலை துணைவேந்தர் (பொ) சுப்பிரமணியன், வேளாண் பல்கலை மாணவிகளின் 'பீகா' என்ற தேன் மற்றும் தேன் மெழுகு சார்ந்த தயாரிப்புகளை முதன்முதலாக விற்பனைக்குத் துவக்கி வைத்தார். விழா அரங்கில், தேனீக்களின் வகைகள், வாழ்க்கை முறை போன்ற அடிப்படைத் தகவல்கள், தொழில்வாய்ப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கு ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. தேன் மெழுகைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்தி, சிலை, சோப்பு, லிப் பாம், கிராக் கிரீம், தேனில் மதிப்புக்கூட்டப்பட்ட நெல்லித் தேன், குல்கந்து, சுவையூட்டப்பட்ட தேன் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல்கலை மாணவர் சேர்க்கை டீன் வெங்கடேச பழனிசாமி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பாலசுப்பிரமணி, பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் சாந்தி, பூச்சியியல் துறை பேராசிரியர் சாமிநாதன் உட்பட பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், தேனீ வளர்ப்பாளர்கள் பங்கேற்றனர். 'தேனீக்களை புரிந்து கொண்டால் பயமில்லை' பூச்சியியல் துறை 4ம் ஆண்டு மாணவி பாக்கியலட்சுமி தேனீக்களை முகத்தில் படரவிட்டு, அமைதியாக அமர்ந்திருந்தார். 'தேனீக்களை பார்த்து அச்சப்படத் தேவையில்லை. அவற்றைப் புரிந்து கொண்டு கையாளத் தெரிந்தால் போதும்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'Apis cerana indica' எனப்படும் இந்திய வகை தேனீக்களை சுமார் 20 ஆயிரம் எண்ணிக்கையில் முகத்தில் படரவிட்டிருந்தார். இது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.