உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெல் விலையை உயர்த்தி கொடுக்க  விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை

நெல் விலையை உயர்த்தி கொடுக்க  விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை

பொள்ளாச்சி; 'நெல்லுக்கான விலையை உயர்த்தி கொடுங்க', என, விவசாயிகள், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' என்ற திட்டத்தில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுப்பணிகளை துவங்கிய கலெக்டர், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல், கொப்பரை கொள்முதல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, நீரா பானம் தயாரிப்பு குறித்து கேட்டறிந்தார்.அப்போது, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள், விவசாயி பட்டீஸ்வரன் ஆகியோர் கலெக்டரை வரவேற்றனர். தொடர்ந்து, நெல் கொள்முதலுக்கான விலையை உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தினர்.தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் கூறியதாவது: கோட்டூரில் நெல் கொள்முதல் மையத்தை விரிவுபடுத்த வேண்டும். சன்னரகம் குவிண்டாலுக்கு, 2,450 ரூபாய், பொது ரகம், 2,405 ரூபாய் என, கடந்தாண்டு விலையே தற்போதும் நீடிக்கிறது.சாகுபடி முதல் அறுவடை வரை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப நெல் விலையை உயர்த்தி கொடுத்தால் மட்டுமே பயன் பெற முடியும். குவிண்டாலுக்கு, மூவாயிரம் ரூபாயாக வழங்க வேண்டும். கோட்டூர் பேரூராட்சியில், அம்ருத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.விவசாயிகளின் கருத்துகளை கேட்ட மாவட்ட கலெக்டர், நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து, அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.அதன்பின், நிருபர்களிடம் கூறுகையில், ''முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஆனைமலையில் நடக்கிறது. அனைத்து மாவட்ட அளவிலான அலுவலர்கள், கிராமங்களில் கள ஆய்வு செய்து அரசின் திட்டங்களை மக்களிடம் தெரிவிக்கின்றனர். ''மேலும், வளர்ச்சிப்பணிகளை பார்வையிடுவதுடன், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்படுகின்றன.இது அந்த துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்,'' என்றார்.

பள்ளிகளில் விழிப்புணர்வு!

தென் மாவட்டங்களில், பள்ளிகளில் வன்முறைகள் நடக்கின்றன. அதுபோன்று சம்பவங்கள் இங்கு நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா, என கலெக்டரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். பதிலளித்த கலெக்டர், ''பள்ளிகளில் வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். போலீசாருடன் இணைந்து அனைத்து பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சட்ட திட்டங்கள் குறித்தும், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படும். குற்றம், வன்முறைச்சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் தெரிவிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை