காலாவதி மருந்து கொட்டிய வாகனத்திற்கு அபராதம்
கோவில்பாளையம்; கோட்டைபாளையம் அருகே காலாவதியான மருந்துகளை கொட்டிய வாகன உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பாளையம் அருகே கோட்டை பாளையம் மயானத்தில் நேற்று முன்தினம் இரவு சரக்கு ஆட்டோவில் காலாவதியான மருந்து கழிவுகளை சிலர் கொட்டிக் கொண்டிருந்தனர்.இதை பார்த்த அப்பகுதி மக்கள், அங்கு கூடினர். காலாவதி மருந்துகளை கொட்டிய வாகனத்தை சிறை பிடித்தனர். இதையடுத்து கோவில்பாளையம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் விசாரணையில், 'கோவையைச் சேர்ந்த தனியார் மருந்து பொருள் விநியோக நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு ஆட்டோ எனவும் ஓட்டுனர் மகேஸ்வரன், 22, மருந்து விற்பனை பிரதிநிதி ஹரிகரன், 23, எனவும், இவர்கள் காலாவதியான மருந்துகளை சேகரித்து வந்து அங்கு கொட்டியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் காலாவதி மருந்து கொட்டிய வாகனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.'அபராதம் செலுத்திய ரசீது சமர்ப்பிக்கப்பட்டால் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சரக்கு ஆட்டோ விடுவிக்கப்படும்,' என கோவில் பாளையம் போலீசார் தெரிவித்தனர்.