| ADDED : டிச 11, 2025 05:12 AM
கோவை: ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு, இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சென்னையில் நடந்த நிகழ்வில் துவக்கிவைத்தார். சத்குரு வழிகாட்டுதலில், ஈஷா அறக்கட்டளை தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக, பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. அரசுடன் இணைந்து ஈஷா நிர்வகிக்கும் மயானங்களில் பழமையான சடங்குகள் மற்றும் சக்திமிக்க இறுதிச் சடங்குகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஈஷா அறக்கட்டளை தற்போது தமிழக அரசுடன் இணைந்து 17 எரிவாயு தகன மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது. சென்னை, வேலுார், தஞ்சாவூர், நெய்வேலி மற்றும் கோவை மாவட்டங்களில், பராமரித்து வருகிறது. இதனுடன் கூடுதலாக, 3 மயானங்களின் பராமரிப்புப் பொறுப்பையும் அறக்கட்டளை ஏற்கவுள்ளது. தற்போது துவங்கப்பட்டுள்ள, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கான இலவச தகன சேவையானது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன், எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.